ETV Bharat / state

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்தால் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

author img

By

Published : Aug 7, 2021, 2:05 PM IST

Updated : Aug 7, 2021, 2:18 PM IST

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்  chennai high court  high court  chennai news  chennai latest news  பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை  மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை  tc providing issue  immediate action taken against tc providing issue  immediate action  court news
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா பேரிடர் காரணமாக தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட விழுக்காடு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் பல மாணவர்கள் வேறு பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சேர்ந்துவருகின்றனர். வேறு பள்ளிகளில் சேர விரும்புவோர், மாற்றுச் சான்றிதழ் கோரும்போது, கட்டண பிரச்சினை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வழங்க மறுப்பதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது

இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, தனியார் சுயநிதி பள்ளிகள் முழுவதும் மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுகின்றன எனவும், எந்தெந்த மாணவர்கள் பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர், யார் வேறு பள்ளிக்குச் செல்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாவிட்டால் பள்ளிகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாற்றுச் சான்றிதழ் வழங்க உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இக்கட்டான சூழ்நிலையில் அரசின் ஒவ்வொரு முடிவிலும் தலையிட முடியாது என்ற போதிலும், இருதரப்பின் பாதிப்பைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி,

"வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற பள்ளி, ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

கட்டண பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்கக் கூடாது என ஆணையிட்டார்.

சான்றிதழ் வழங்க மறுத்தால் நடவடிக்கை

மேலும் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக இரு வாரங்களில் உரிய சுற்றறிக்கையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராகப் புகார் தெரிவிக்கப்பட்டால், இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனவும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு நீதிபதி எச்சரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க: திருப்பூரில் 26 இறைச்சிக் கடைகள் அகற்றம்: வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்

Last Updated : Aug 7, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.